
அமெரிக்காவில் தொடரும் இனவெறி… சீக்கிய பெண்ணை சீண்டிய வெள்ளையன்…
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய, ஆப்பிரிக்கர்கள் மற்றும் அவற்றின் வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய வம்சாவளியை சேர்ந்த ராஜ்பிரீத் என்ற பெண்ணுக்கு அமெரிக்க நாட்டின் வெள்ளைக்காரர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பது இந்தியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், மன்ஹாட்டன் நகரில் உள்ள தனது தோழியின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக ராஜ்பிரீத் அங்குள்ள சுரங்க ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பெட்டியில் அவருக்கு மிக அருகில் பயணம் செய்த வெள்ளைக்காரர் ஒருவர், நீங்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்தீர்கள்?... உங்களைப் போன்றவர்களால்தான் நாடு சீரழிந்து விட்டது. மரியாதையாக இங்கிருந்து ஓடிவிடு. இந்த நாட்டில் நீ இருக்கவே கூடாது" என்று ஆவேசத்துடன் மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த ராஜ்பிரீத் , அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரியிடம் இதுபற்றி புகார் செய்தார்.
ஆனாலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ராஜ்பிரீத் புகார் தெரிவித்துள்ளார்.