
அமெரிக்க ராணுவத்தில் ஆயுதப்படையில் பணியாற்றும் சீக்கியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாடி வைக்கவும், தலைப் பாகை (டர்பன்) அணியவும் அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான உத்தரவை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள், அதிலும் ராணுவத்தில் பணியாற்றுவோரின் நீண்ட நாள் கோரிக்கையான தாடிவைப்பது, தலைப்பாகை அணிவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களின் உரிமைக்காக பேசிய எம்.பி. ஜோ குரோவ்லி கூறுகையில், “ நாங்கள் வலிமையான நாட்டை பெற்று இருக்கிறோம். வலிமையான ராணுவத்தை கொண்டு இருக்கிறோம். ஏனென்றால், அனைத்து வீரர்களின் தனிப்பட்ட சுதந்திரம், மத சுதந்திரத்துக்கு மதிப்பு அளித்து வருகிறோம். அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள் இந்த நாட்டை நேசிக்கிறார்கள். அவர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியம் '' என்று தெரிவித்தார்.
இதையடுத்து, இனி, அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சீக்கியர்கள் அவர்களின் மதக்கடமையான தாடி வைத்துக்கொள்வது, தலையில் தலைப்பாகை அணிந்து பணியாற்ற முடியும்.