கொடூர முகத்தை காட்டும் கொரோனா.. ஜெட் வேகத்தில் செல்லும் உயிரிழப்பு.. 16,000 நெருங்குவதால் உலக நாடுகள் பீதி.!

By vinoth kumarFirst Published Mar 23, 2020, 5:05 PM IST
Highlights

உலக முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,297-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், உலகளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,49,090-ஆக அதிகரித்துள்ளது. 

உலக முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,297-ஆக அதிகரித்துள்ளது. இதனால், உலக நாடுகள் பெரும் பீதி அடைந்துள்ளனர். 

சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 
சர்வதேச அளவில் 35 நாடுகள் முழு அடைப்பை அமல்படுத்தி உள்ளன. பயணம், வர்த்தகம், வியாபாரம் ஆகியவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. வைரஸ் பரவுதலைத் தடுக்க இந்த நடவடிகைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இத்தாலி முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குதான் சீனாவை அடுத்து 4,800 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இத்தாலியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அமெரிக்காவிலும் லட்சக்கணக்கானோர் வீட்டிலேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நியூ ஜெர்ஸியில் பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ், ஸ்பெயின். ஈரான் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நாட்டுக்குள்ளேயே பயணிப்பதைத் தவிர்க்குமாறு அரசு கேட்டுக்கொண்டது. அதேபோல், இந்தியாவில் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். 

இந்நிலையில், உலக முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,297-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், உலகளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,49,090-ஆக அதிகரித்துள்ளது. 

click me!