பசிபிக் தீவு நாடான டோங்காவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tonga earthquake: பசிபிக் தீவு நாடான டோங்காவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகள் என்ற அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்படுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.48 மணிக்கு டோங்காவை மையமாக வைத்து நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹோலேவா மற்றும் நுகுஅலோஃபா உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் குடியிருப்பாளர்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டோங்கோவில் மிகப்பெரிய நிலநடுக்கம்
நிலநடுக்கத்தின் மையப்பகுதி பங்காயிலிருந்து தென்கிழக்கே 127 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது. இது ஒரு ஆழமற்ற நிலநடுக்கம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை, உயிரிழப்புகள் அல்லது கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி டோங்கா தீவுகளில் பங்காயிலிருந்து தென்கிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கம் காரணமாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் (185 மைல்) சுற்றளவில் உள்ள கடற்கரையோரங்களை ஆபத்தான அலைகள் பாதிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டோங்கோ அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் அமைநதுள்ளது குறிப்பிடத்தக்கது.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கம்
டோங்கா என்பது தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள ஒரு பாலினேசிய பிரதேசம் ஆகும். இது வெள்ளை மணல் கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் அடர்ந்த வெப்பமண்டல மழைக்காடுகளைக் கொண்ட 170 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ளது. அண்மை காலமாக உலகளவில் அடிக்கடி பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மியான்மரை மையமாக கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 புள்ளிகளாக பதிவானது.
மியான்மருக்கு இந்தியா உதவி
இதனால் மியான்மர் மட்டுமின்றி தாய்லாந்தின் பாங்காங்கிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் 1600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும் பாதிப்பை சந்தித்துள்ள மியான்மருக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி செய்வது வருவது குறிப்பிடத்தக்கது.