
சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்தில், 58 வீடுகள் தரைமட்டமாயின. இதில் இடிபாடுகளில் சிக்கி 14 பேர் பலியானாகள். 147 பேர், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் சான்சி மாகாணம், சின்மின் நகர குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் தற்காலிக வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அங்குள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த கட்டிடம் இடிந்து நாசமானது.
மேலும், அருகில் இருந்த கட்டிடங்களும் இடிந்து தரை மட்டமானதுடன், அடுத்தடுத்து 58 வீடுகள் இடிந்ததுடன், 63 கார்களும் உருக்குலைந்து போயின. இந்த விபத்தில் ஏராளமானோர் சிக்கினர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 14 பேர் இறந்தனர். 147 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்ததும், மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வெடிவிபத்து நேரிட்ட வீட்டில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததே சம்பவத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டின் உரிமையாளரை போலீசார், கைது செய்தனர்.