அதிவேகமாக வந்த கார் - போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு...!

By Kevin KaarkiFirst Published Apr 25, 2022, 11:05 AM IST
Highlights

கார் அவர்களை நோக்கி வருவதை போலீசார் கவனித்தனர். இதை அடுத்து போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

செண்ட்ரல் பாரிஸ் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசாரை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. இதை கவனித்த காவர்கள், கார் அவர்களை நெருங்கும் வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த மற்றொருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

பாரிசின் பாண்ட் நெஃப் பகுதியில் உள்ள பழைய தொங்கும் பாலத்தின் அருகே நள்ளிரவு வேளையில் கார் அதிவேகமாக வந்துள்ளது. இதோடு காவல் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. இதை அடுத்து கார் அவர்களை நோக்கி வருவதை போலீசார் கவனித்தனர். இதை அடுத்து போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

போக்குவரத்து நெரிசல்:

துபாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் கூட்டம் அதிகரித்து விட்டது. சேதம் அடைந்த நிலையில், போக்ஸ்வேகன் செடான் கார் அருகில் இரு சடலங்கள் வெள்ளை நிற துணியால் மூடப்பட்டு இருப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து சென்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து சுமார் 1.2 மைல் தொலைவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக அதிபராக இருக்கும் தருணத்தை அங்கு கூடியிருந்த ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். இந்த கொண்டாட்டம் சேம்ப் டி மார்ஸ் பார்க்-இல் நடைபெற்றது. 

தேர்தல் பரபரப்பு:

இமானுவல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளை பெறவில்லை. இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இரண்டாம் கட்டம் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் இமானுவேல் மேக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 41.8 சதவீதம் வாக்குகள் பெற்றார்.

விசாரணை:

"முதலில் நான்கு தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் எனக்கு கேட்டது. திரும்பி பார்த்ததும், நபர் ஒருவர் ஓடி வந்து கொண்டிருந்தார். பின் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். நிச்சயம் அவர் ஓட்டுனராக இருக்க முடியாது. அவர் பயணியாகவே இருந்திருக்க வேண்டும்," என சம்பவ இடத்தின் அருகில் இருந்த இ சம்மக் தெரிவித்தார். பொது இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. 

click me!