விஜயகாந்த் தொடர்பான தொடர் கேள்விகளால் கடுப்பான ஐஸ்வர்யா ராஜேஷ்; செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு

Jan 4, 2024, 8:08 PM IST

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் நகை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம், நடிகர் விஜயகாந்த் பெயரை நடிகர் சங்கத்திற்கு வைப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நடிகர் சங்க கட்டடத்துக்கு நடிகர் விஜயகாந்த் பெயர் வைப்பது பொது கருத்தாக இருந்தால் அது தவறில்லை, அனைத்து நடிகர்களின் கருத்து தான் தனது கருத்தும்.

சினிமா துறை பின்னோக்கி செல்கிறது என்ற தகவல் பொய்யானது. சினிமா எப்போதும் மங்கிபோகாது என்றார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது நல்லது தான், உதவி செய்வது நமக்கு தெரிந்தால் போதும், மற்றவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றார். தொடர்ந்து, விஜயகாந்தின் மறைவுக்கு வராதது தொடர்பான கேள்வியால் கடுப்பான நடிகை ஐஸ்வர்யா, நாம் கடை திறப்புக்காக வந்துள்ளோம், அதை பற்றி மட்டும் பேசலாம் என்று சற்று காட்டமாக பதில் அளித்தார்.