கொரோனா வதந்தி..! வாட்ஸ் அப் சேவையில் மீண்டும் அதிரடி மாற்றம்..!

By Manikandan S R SFirst Published Apr 7, 2020, 2:40 PM IST
Highlights

வாட்ஸ் அப்பில் வதந்தி பரவுவதை கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக தகவல் பரிமாற்றத்தில் கட்டுப்பாட்டை அந்நிறுவனம் விதித்துள்ளது. அதன்படி அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்கிற மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில் இந்தியாவிலும் தற்போது அதன் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தி இருக்கிறார். கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும்படி அரசு அறிவித்திருக்கிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.

பொழுதுபோக்கிற்காக 24 மணி நேரமும் மக்கள் தொலைக்காட்சியையும் மொபைல் போனையுமே பார்த்தபடி இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து சமூக வலைதளங்களில் பல வதங்கிகள் பரவி வருகின்றன. வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் பல வதந்தியாக இருக்கும் நிலையில் மக்கள் அதன் உண்மை தன்மையை ஆராயாமல் பலருக்கு பகிர்ந்து விடுகின்றனர். கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் வதந்தி பரவுவதை கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக தகவல் பரிமாற்றத்தில் கட்டுப்பாட்டை அந்நிறுவனம் விதித்துள்ளது. அதன்படி அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்கிற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஒரே சமயத்தில் 5 பேருக்கு தகவல்கள் அனுப்ப முடியும் என்றிருந்த நிலையில் இனி, அதிகம் பகிரப்படும் தகவல்களை ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!