WhatsApp : வாட்ஸ்அப் செயலிக்கு மத்திய அரசு கொடுத்த ஸ்பெஷல் அனுமதி.... மகிழ்ச்சியில் பயனர்கள்

By Ganesh PerumalFirst Published Nov 30, 2021, 9:42 PM IST
Highlights

பேமெண்ட்ஸ் அம்சம் மூலம் வாட்ஸ்அப் செயலி, கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகளுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளது.

இந்தியாவில் பல கோடி மக்கள், தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக இருந்து வருகிறது வாட்ஸ்அப். அந்நிறுவனம் இந்தியாவில் தனது பேமெண்ட்ஸ் சேவையை 2 கோடி பேருக்கு வழங்கி வந்த நிலையில், அதனை தற்போது 4 கோடி பேருக்கு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

UPI சார்ந்து இயங்கும் பேமெண்ட் சேவைக்கு நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ.) அனுமதி அளித்து இருக்கிறது. இதன்மூலம் என்.பி.சி.ஐ. வலைதளத்தில் மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலில் தற்போது வாட்ஸ்அப்பும் இடம்பெற்றுள்ளது. 

என்.பி.சி.ஐ. வலைதள விவரங்களின்படி வாட்ஸ்அப் நிறுவனம் ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவைகளை தனது பேமண்ட் சேவை வழங்குனராக பயன்படுத்த இருக்கிறது. பேமெண்ட்ஸ் அம்சம் மூலம் வாட்ஸ்அப் செயலி, கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகளுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளது.

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் செயலியினுள் UPI உருவாக்கி கொள்ளலாம். பின் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை ஷேர் செய்வதை போன்றே மிக எளிமையாக பணம் அனுப்பலாம். தற்போது UPI தொழில்நுட்பத்தை பயன்படுத்த என்.பி.சி.ஐ. வலைதளத்தில் வாட்ஸப் உள்பட மொத்தம் 21 மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

click me!