
தென்கொரிய தொழில்நுட்ப ஜாம்பவானான சாம்சங், தனது புதிய படைப்புகள் மூலம் எப்போதும் வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்துவதில் தவறுவதில்லை. பட்ஜெட் விலையில் கேலக்ஸி 'ஏ' சீரிஸ் முதல், பிரம்மாண்டமான கேலக்ஸி 'எஸ்' சீரிஸ் மற்றும் ஃபோல்டபிள் போன்கள் வரை சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில், தொழில்நுட்ப உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில், 20,000 mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
சமீப காலங்களில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் போன்களுக்கான தேவை மக்களிடையே அதிகரித்துள்ளது. பொதுவாக சந்தையில் கிடைக்கும் போன்கள் 6,000 mAh அல்லது 7,000 mAh பேட்டரியுடன் ஒரு நாள் முழுவதும் தாக்குப்பிடிக்கும் வகையில் வருகின்றன. ஆனால், சாம்சங் இதுவரை பாதுகாப்பான பாதையிலேயே பயணித்து வந்தது. தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல் உண்மையானால், பேட்டரி தொழில்நுட்பத்தில் சாம்சங் ஒரு புரட்சியை ஏற்படுத்தத் தயாராகிவிட்டது என்றே கூறலாம்.
சமூக வலைத்தளமான 'X' (முன்பு ட்விட்டர்) தளத்தில் @phonefuturist என்ற டிப்ஸ்டர் மூலம் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த போன் 'டூயல் செல்' (Dual-cell) வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், இதில் ஒரு பகுதி 12,000 mAh மற்றும் மற்றொரு பகுதி 8,000 mAh என மொத்தம் 20,000 mAh திறனை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக எடை குறைவான மற்றும் அதிக திறன் கொண்ட 'சிலிக்கான்-கார்பன்' (Silicon-carbon) தொழில்நுட்பத்தை சாம்சங் பயன்படுத்தவுள்ளது.
இந்த பிரம்மாண்ட பேட்டரி மூலம் சுமார் 27 மணிநேரம் தொடர்ந்து ஸ்கிரீன்-ஆன் டைம் (Screen-on time) கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, நாள் முழுவதும் வீடியோ பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது போன்ற அதிகப்படியான பயன்பாட்டிற்குப் பிறகும் சார்ஜ் மீதமிருக்கும். மேலும், இது வருடத்திற்கு 960 சார்ஜிங் சுழற்சிகளைக் (Charging cycles) தாங்கும் திறன் கொண்டது என்பதால், பேட்டரியின் ஆயுட்காலம் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்பது குறித்து சாம்சங் நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதன் வடிவமைப்பு எப்படி இருக்கும் அல்லது இது யாருக்காக உருவாக்கப்படுகிறது என்ற விவரங்களும் இன்னும் மர்மமாகவே உள்ளன. இருப்பினும், பயணம் செய்பவர்கள் மற்றும் தொடர்ந்து போனைப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையலாம். சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இந்தத் தகவலை ஒரு வதந்தியாகவே கருத வேண்டும் என்றாலும், இது உண்மையானால் ஸ்மார்ட்போன் உலகில் இது ஒரு மைல்கல்லாக அமையும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.