100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் வினோத வழிபாடு; வேண்டுதலை நிறைவேற்றினால் கேட்டது கிடைக்குமாம்...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 31, 2018, 10:18 AM IST
Highlights

இராமநாதபுரத்தில் உள்ள அழகுவள்ளி அம்மனுக்கு பக்தர்கள் சாக்குகளால் தைக்கப்பட்ட ஆடைகளை அனிந்து வேண்டுதல் நிறைவேற்றினர். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழிபாட்டின் மூலம் பக்தர்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் நிறைவேறும் என்று இப்பகுதி மக்கள் பெருமையோடு தெரிவிக்கின்றனர்.
 

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் உள்ள அழகுவள்ளி அம்மனுக்கு பக்தர்கள் சாக்குகளால் தைக்கப்பட்ட ஆடைகளை அனிந்து வேண்டுதல் நிறைவேற்றினர். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழிபாட்டின் மூலம் பக்தர்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் நிறைவேறும் என்று இப்பகுதி மக்கள் பெருமையோடு தெரிவிக்கின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேவுள்ளது செங்கப்படை கிராமம். இக்கிராமத்தில் 'அழகுவள்ளி அம்மன் கோயில்' உள்ளது. இக்கோயிலில் பொங்கல் விழா நடைப்பெறுகிறது. இதனையொட்டி கடந்த 20-ஆம் தேதி காப்புக் கட்டியும், கொடி ஏற்றியும் திருவிழாவைத் தொடங்கினர் இப்பகுதி மக்கள்.  

தொடர்ந்து 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அழகுவள்ளி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், கும்பமெடுத்தல் போன்ற நிகச்சிகளும், 28-ஆம் தேதி அம்மனுக்கு 1008 திருவிளக்கு பூசையும் நடத்தப்பட்டது. மேலும், பொங்கல் வைத்தல், முளைப்பாரி அழைத்தல் போன்றவையும் நடைப்பெற்றன. 

இந்த நிலையில், நேற்று காலை பக்தர்கள் அக்னிச் சட்டி, பால் குடம், பூ குழி, அலகு குத்துதல், சேத்தாண்டி வேடம், கரும்பாலை தொட்டிக் கட்டுதல் போன்ற நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். 

இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வாக நேற்று மாலை சாக்குகளை கொண்டு தைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஆடிப்பாடி ஊர்வலம் மேற்கொண்டனர். சாக்கு ஆடைகளை அணிந்துகொண்டு வந்த பக்தர்கள் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டனர். 

இப்படி சாக்கு அணிந்து பக்தர்கள் அம்மனை வழிபடும் நிகழ்வு 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறதாம். இந்த வினோத வேண்டுதலை நிறைவேற்றினால் பக்தர்களுக்கு அவர்களது வேண்டுதல்கள், உடல் ஆரோக்கியம், குழந்தை வரம் போன்றவை நிறைவேறுகிறது என்று இதனால் பலனடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

click me!