
மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தபோது, சிறுநீரகத்தை திருடிவிட்டதாக, கூலித்தொழிலாளி ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள நாச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக குன்னத்தூரில் உள்ள தனியார் மருத்துவமையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், செந்தில்நாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது, அவர் மாவட்ட ஆட்சியிரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அப்போது, டாக்டர் தேவராஜ், என்னை வேறொரு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று, மயக்க ஊசி போட்டு, உடலில் உள்ள ஒரு சிறுநீரகத்தை திருடி விட்டதாகவும் புகார் கூறினார். டாக்டர் தேவராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.
இதுபோன்ற ஒரு சூழலில் என்னால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும், எனவே, என்னுடைய குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு எனக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், செந்தில்நாதன் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக, செந்தில்நாதனிடம் மாவட்ட ஆட்சியரி உறுதி கூறியுள்ளார்.