
கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள், வங்கி கணக்கில் வரவு வைப்பதாக சொன்ன எங்கள் ஓய்வூதியம் எங்கே? என்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை செய்துவிட்டு, தற்போது ஓய்வூதியதாரர்களாக இருப்பவர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது.
இதனைக் கண்டித்து, கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டமைப்பினர் தொடர்ந்து நூதன முறையில் போராட்டங்களை நடத்துகின்றனர்.
நேற்று நடந்த போராட்டத்தில், வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு கூட்டமைப்பு நிர்வாகி முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போக்குவரத்துக்கழக பணிமனைக்குள் பேருந்துகளை அனுமதிக்கவில்லை. இதனால் அரசு பேருந்துகள் கும்பகோணத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டமைப்பினர் கூறியது:
“ஓய்வூதியத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறினர். ஆனால், இதுவரை அப்படி எந்தவொரு வரவும் வைக்கப்படவில்லை. அதனால், தொடர்ந்து நூதன முறையில் போராட்டத்தை நடத்தி வருகின்றோம்” என்று அவர்கள் கூறினர்.