
சேலம்
சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்க எங்கள் நிலத்தை தர முடியாது என்றும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் 100-க்கும் மேற்பட்ட மக்கள் மனு அளித்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலைமை தாங்கினார். அவர் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் குப்பனூர், சின்னகௌண்டாபுரம், ராமலிங்கபுரம், வரகம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், "சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.11 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பசுமை சாலை திட்டம் அமைந்தால் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் வன நிலங்கள் அழிந்து விடும்.
இதனால் 25 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் வீடுகள் இடிக்கும்போது குடியிருக்க வீடு இல்லாத நிலை ஏற்படும். சிறு, குறு விவசாயிகளான எங்களுக்கு தற்போதுள்ள இந்த விவசாய நிலங்கள் மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. இது தவிர வேறு வாழ்வாதாரம் இல்லை.
எனவே பசுமை வழிச்சாலைக்கு எங்கள் நிலத்தை தர இயலாது. சேலத்தில் இருந்து சென்னை செல்ல தற்போது 4 பிரதான சாலைகள் உள்ளன. தற்போதுள்ள இந்த பிரதான சாலைகளை விரிவுபடுத்தினாலே போதுமானதாக இருக்கும்.
எனவே, விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.