
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து ஆபரேஷன் சந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என இந்தியா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி
இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போர் பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும்.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக போர் பேரணி
இந்த பேரணி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.