சுழலும் நாற்காலி, பார்ப்போரை பொறாமை கொள்ள வைக்கும் பச்சை மையில் கையெழுத்து, வெளியே செல்வதற்கு கனகம்பீரமான அரசு வாகனம் என சமகால அதிகாரிகளில் சிலர் மிக சொகுசாகவே வாழ்ந்து வருகின்றனர்.
அதிகார மிடுக்குடன், பகட்டு வாழ்க்கை வாழும் சில மனிதர்களுக்கு மத்தியில் இவர் கொஞ்சம் வித்தியாசமான அதிகாரி. விருதுநகர் மாவட்ட மக்களால் அப்துல் கலாம் என்று போற்றப்படுபவர். அரசுத் துறையில் சேர வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர்ளுக்கு உற்சாகமாக டானிக்.
மாதம் பிறந்தால் கைநிறையச் சம்பளம், வார இறுதியில் குளு குளு கொடைக்கானல் பயணம் என்றில்லாமல், ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றி அதில் இன்பம் கண்டு வருகிறார் ராஜபாளையம் வட்டாட்சியர் மாரிமுத்து.
வட்டாட்சியருக்கு உரிய அதிகார மிடுக்கு இவரிடம் இல்லவே இல்லை. மாரிமுத்துவுக்கு அதிகாரச் செருக்கா…! அபத்தம் என்று மாவட்ட மக்கள் சொல்லும் அளவுக்கு சத்தமில்லாமல் பல சாதனைகளை படைத்து அசத்தி வருகிறார் மாரிமுத்து.
இவரின் சாதனைகள் குறித்து “NEWSFAST” வாசகர்கள் எக்கச்சக்கமான கடிதங்களை எங்களுக்கு எழுதியிருந்தனர். ஆச்சிரியப்பட வைக்கிறாரே என்ற வியப்புடனே விருதுநகர் பயணித்தோம்.
ராஜபாளையம் வட்டாட்சியர் மாரிமுத்துவைப் பார்க்கணுமே என்று விருதுநகர் பேருந்துநிலையத்தில் விசாரித்தோம். இன்னிக்கு சனிக்கிழமை, வருவாய் சங்க அலுவலகத்திற்கு போங்க. அங்க தான் இருப்பார் என்று பதிலளித்தனர் மக்கள்.
கார் ஒன்றைப் பிடித்து மக்கள் குறிப்பிட்ட முகவரியில் இறங்கினோம். ஓட்டுநருக்கு பணத்தை கொடுத்து விட்டு அலுவலகத்திற்குள் செல்லும் போது எக்கச்சக்க கூட்டம். 18 வயது தொடங்கி 34 வரை அனைத்துமே இளசுகள் கூட்டம்.
வேலைவாய்ப்பு முகாமிற்குள் வந்துவிட்டோமா என்ற சந்தேகத்துடனே விசாரித்தோம். இல்லை நீங்க சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கீங்க என்று நம் கரம் பிடித்து அழைத்துச் சென்றார் பார்வையற்ற இளைஞன் ஒருவன்..
மக்கள் திரளுக்குள் புகுந்து ஒரு வழியாக ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்து கொண்டேன். ஆமா இங்க யாரு வட்டாட்சியர் மாரிமுத்து என்று விசாரிக்கையில், அதோ மைக் பிடிச்சு பேசிட்டு இருக்கார்ல அவர் தான் மாரிமுத்து ஐயா. எங்களுக்கெல்லாம் தெய்வம் மாதிரி என்றார்.
அரசுத் தேர்வுகளுக்காக எப்படித் தயாராக வேண்டும். ரயில்வே துறையில் எப்படி எல்லாம் கேள்வி கேட்பாங்க என டெக்னிக்கல் முதல் நான் டெக்னிக்கல் வரை அத்தனை விஷயங்களிலும் மாணவர்களுக்கு இன்ஸ்பிரேஷசன் ஸ்பீச் கொடுத்து அசத்திக் கொண்டிருந்தார்.
பத்திரிகையைாளராக அமர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை நானே மறக்கும் அளவுக்கு அவரது பேச்சில் அத்தனை உற்சாகம், உத்வேகம்,இவர் அளித்து வந்த இலவச பயிற்சிகளால் ஆதிக்க சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பலர் இன்று அரசு உத்யோகத்தில் கால் மேல் கால் போட்டு காலரைத் தூக்கி விட்டு மரியாதையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பயிற்சி நிறைவுற்றதும், கண் பார்வையில்லாமல் என் கை பிடித்து அழைத்து வந்த அந்த இளைஞன் என்னைக் கிள்ளி இப்போ சொல்லுங்க. இவர் எங்களுக்கு சாமி தானே என்றார்.