
Vanathi Srinivasan And Annamalai: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல் ஆளாக ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
பாஜகவின் புதிய திட்டம் (BJP PLAN)
இதேபோல் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, இந்த முறை வாய்ப்பை கோட்டை விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் காலூன்ற துடித்து வரும் பாஜக இந்த முறை கணிசமான இடங்களில் வெற்றி பெற நெருக்கடியில் உள்ளது. இதற்காக பலமான கூட்டணியை அமைக்க தயாராகி வருகிறது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக (ADMK) வெளியேறி விட்டது. இதனால் அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக தலைமை முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு பாஜக மூத்த தலைவருமான வானதி சீனிவாசன் பாஜகவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவின் தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இதனால் புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த ஜனவரி மாதமே புதிய தலைவர் நியமிக்கப்பட இருந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தல் உள்பட பல்வேறு காரணங்களால் இது தாமதமாகி வந்தது.
பாஜக தேசியத் தலைவர் ரேஸில் வானதி சீனிவாசன்?
பாஜக தேசியத் தலைவர் ரேஸில் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, ஜி கிஷன் ரெட்டி, ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி ஆகியோர் உள்ளனர். இந்த போட்டியில் பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் (Vanathi Srinivasan) உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக பிரமாண சமூகத்தை சேர்ந்தவர்களை தேசியத் தலைவர்களை நியமிப்பதை பாஜக வழக்கமாக வைத்துள்ளது. மேலும் பாஜக தலைவர்கள் தேர்வில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
அதன்படி ஆர்எஸ்எஸ் அமைப்பு பரிந்துரையின்பேரில் மேற்கண்ட 4 பேரும் தேசியத் தலைவர்கள் ரேஸில் உள்ளனர். இந்த முறை தென் மாநிலங்களை சேர்ந்த ஒருவரை அதுவும் ஒரு பெண்ணை தேசியத் தலைவராக கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளதாகவும், ஆகையால் புரந்தேஸ்வரி, வானதி சீனிவாசன் ஆகியோர் தேசியத் தலைவர்கள் ரேஸில் முன்னணியில் இருப்பதாகவும் பாஜக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
வானதி சீனிவாசனை டிக் செய்தது ஏன்?
வானதி சீனிவாசனை பொறுத்தவரை நீண்டகாலமாக தமிழ்நாடு பாஜகவுக்கு ஓய்வின்றி உழைத்து வருகிறார். எல்.முருகனுக்கு பிறகு அவர் தமிழ்நாடு பாஜக தலைவராக வருவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை அண்ணாமலை (Annamalai) தட்டிச்சென்று விட்டார். இதனால் நீண்டகாலமாக பெரிய பதவியின்றி கட்சிக்காக உழைத்து வரும் வானதி சீனிவாசனுக்கு பெருமை அளிக்கும்விதமாகவும், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தும் அவரை தலைவராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வானதி சீனிவாசன் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டால் ''தமிழ்நாட்டு பெண்ணை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம்'' என பெருமையுடன் கூறி பெண்களையும், பிராமண சமுதாய மக்களையும் கவர முடியும் என பாஜக நினைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதேபோல் அண்ணாமலை நீண்ட காலம் தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ளார். அவரையும் மத்திய அமைச்சராக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மத்திய அமைச்சராகும் அண்ணாமலை?
தமிழ்நாடு பாஜக தலைவர்களாக இருந்தவர்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல பாஜக என்றுமே தவறியதில்லை. உதாரணத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் நியமிக்கப்படார். எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதேபோல் அண்ணாமலைக்கும் பெரிய கவுரவம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
அண்ணாமலையை பொறுத்தவரை தமிழ்நாடு பாஜக வளர்ச்சியில் அவரது பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. இன்று மூலை, முடுக்கெல்லாம் பாஜக சென்றடைந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை என்பதை யாரும் மறுக்க முடியாது. சொல்லப்போனால் முந்தைய பாஜக தலைவர்களை விட திமுகவை அட்டாக் செய்வது, அரசின் குற்றங்களை பட்டியலிடுவது, போராட்டங்கள் நடத்துவது என எல்லாவற்றிலும் அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார்.
விஜய், சீமான் இருக்க அண்ணாமலை எதற்கு?
இது ஒருபக்கம் இருக்க, நாம் தமிழர் கட்சியின் சீமானும், தவெக விஜய்யும் (Vijay and Seeman) பாஜகவின் பி டீம்கள் என்றும் பாஜகதான் இவர்களை களமிறக்கி விட்டதாகவும் பலரும் கூறுகின்றனர். ஆகவே அண்ணாமலைக்கு மாற்றாக விஜய், சீமான் களமிறக்கி விடப்பட்டுள்ளதால் இனிமேல் அண்ணாமலையை மத்திய அமைச்சராக்கலாம் எனற முடிவுக்கு பாஜக வந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.