சசிகலா பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று சொன்ன வைத்திலிங்கம் எம்.பி-யின் உருவ பொம்மையை எரித்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைத்திலிங்கம், அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று கருத்து சொன்னார்.
இந்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரம்பலூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு வைத்திலிங்கம் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவரும், இரூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான ஸ்டாலின் தலைமைத் தாங்கினார்.
இதில், ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் பொருளாளர் அசோகன், முன்னாள் பிரதிநிதி அசோகன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வைத்திலிங்கத்திற்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டன. பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.