
விழுப்புரம்
சீருடை பணியாளர் பதவியிடத்திற்கான எழுத்து தேர்வை விழுப்புரத்தில் வருகிற 21–ஆம் தேதி 31 ஆயிரத்து 926 பேர் எழுத இருக்கின்றனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்போர் பதவி இடங்களுக்கான எழுத்து தேர்வு வருகிற 21–ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, இராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி, கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப்பள்ளி, அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி, இந்திலி ஆர்.கே.சண்முகம் கல்லூரி, கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 11 மையங்களில் நடைபெறும்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தது:
“காலை 10 மணிக்கு தொடங்கி 11.20 மணி வரை நடக்கும் இந்தத் தேர்வை 31 ஆயிரத்து 926 பேர் எழுத இருக்கின்றனர்.
தேர்வு மையத்திற்கு 9 மணிக்குள் தேர்வர்கள் ஆஜராக வேண்டும்.
தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு எழுதுவதற்கான அட்டையை கொண்டு வருதல் வேண்டும்.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கொண்டு வராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் போன்றவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் விடைத்தாளில் பட்டை தீட்ட நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு வர வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.