
சாத்தான்குளம்
திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு, தலைமறைவான காதலன் வீட்டு முன்பு காதலி போராட்டத்தில் ஈடுபட்டார். காதலனுடன் சேர்த்து வைக்காவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று காதலி மிரட்டல் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசெல்வன் என்பவரின் மகள் முத்துலட்சுமி (22). இவர் பீடி சுற்றும் தொழில் செய்கிறார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் தர்மலிங்கமும், (25) முத்துலட்சுமியும் இரண்டு வருடமாக காதிலித்து வந்தனர்.
முத்துலட்சுமியைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் தர்மலிங்கம் கணவன், மனைவியாய் வாழ்ந்தனர்.
இந்த நிலையில் இவர்களது திருமணத்திற்கு தர்மலிங்கத்தின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், தன்னை ஏமாற்றி விடுவார்களோ என்ற அச்சத்தில் முத்துலட்சமி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காவலாளர்கள், காதல் ஜோடியின் குடும்பத்தினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்பொழுது தர்மர் தனது மகன் தர்மலிங்கத்தையும், முத்துலட்சுமியையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, கிராமத்தில் உள்ள ஐயா வழி கோவிலில் திருமணம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், காதலன் வீட்டிலிருந்து முத்துலட்சுமி விரட்டி அடிக்கப்பட்டு, தர்மலிங்கமும், தர்மரும் தலைமறைவாகிவிட்டனர்.
இது தொடர்பாக திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், சாத்தான்குளம் காவல் நிலையத்திலும் புகாரளித்தார் முத்துலட்சுமி.
பின்னர், காதலன் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். மேலும் காதலனுடன் சேர்த்து வைக்காவிட்டால் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காதலன் வீட்டு முத்துலட்சுமி அவர் சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்.
இச்சம்பவம் சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.