
காதல் திருமணம் செய்துகொள்வது மிகவும் கடினம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், பல தடைகளைத் தாண்டி காதல் திருமணம் செய்துகொள்வது ஸ்பெஷல் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா அவர்களின் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்
திருமண விழாவில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
"சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இருப்பினும், கண்டிப்பாக இந்தத் திருமண விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இங்கு வந்துள்ளேன்.
இங்கு வந்த பிறகுதான், இது ஒரு காதல் திருமணம் என்று என்னிடம் கூறினார்கள். பொதுவாக, பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைப்பது சிறப்பான நிகழ்ச்சிதான். ஆனால், அதைவிட மிகவும் கடினமானது காதல் திருமணம்" என்று அவர் பேசினார்.
காதல் திருமணம் ஏன் கடினம் என்பதை அவர் விளக்கினார்.
"எல்லோரும் காதல் திருமணம் எளிது என்று நினைப்பார்கள். ஆனால் அது மிகவும் கடினம். முதலில் இருவரும் காதலை வெளிப்படுத்த வேண்டும். பிறகு ஒருவரையொருவர் காதலை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். அதன் பின்னர் இருவரின் பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்க வேண்டும். அடுத்து சொந்தக்காரர்கள் எல்லாம் கிளம்பி வந்து, பல்வேறு இடங்களில் இருந்து பிரச்னை வரும். இந்தத் திருமணத்திற்குத் தடை போட நினைப்பார்கள்."
"இப்படி அனைத்துத் தடைகளையும் மீறித்தான் இன்று இங்கு ஒரு காதல் திருமணம் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் மணமக்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துகள்," என்று அவர் கூறினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியபோது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது மனைவி கிருத்திகாவைக் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டார்.