துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்? பட்டாபிஷேகம் எப்போது?

By Manikanda PrabuFirst Published Jan 11, 2024, 5:01 PM IST
Highlights

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதல்வர் பதவி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

திமுக முன்னாள் தலைவர் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பேரனும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், திமுகவில் இளைஞரணி செயலாளர் பதவி வகிக்கிறார். சமீபத்தில், அமைச்சரவையிலும் சேர்க்கப்பட்டு, அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் காலத்திலேயே, கட்சியில் இளைஞர் அணி செயலாளர், சென்னை மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர் என்று பல பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றி தனது ஆளுமை திறனை வெளிப்படுத்திய ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பொறுப்பும், கட்சியில் செயல் தலைவர் பொறுப்பும் கொடுத்து அழகு பார்த்தார் கலைஞர் கருணாநிதி. 

Latest Videos

அவரது மறைவுக்கு பிறகு, திமுகவின் தலைவராகி, தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று முதல்வர் ஆகியுள்ளார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்ற ஸ்டாலின் தனது அமைச்சரவையில் உதயநிதிக்கு இடமளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாரிசு அரசியல் விமர்சனம் எழும் என்பதால், அப்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இருப்பினும், உதயநிதிக்கு ஆட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, அமைச்சர்கள் பலரும் பொது வெளியில் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும், துணை முதல்வராக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, அமைச்சரவை சீனியாரிட்டிலும் முன்னிலை பெற்றார்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதல்வர் பதவி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக முதல்வர் ஸ்டாலின் பங்கெடுக்க வேண்டிய நிகழ்ச்சிகளில் அவருக்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வரும் பின்னணியில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, தான் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதை முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். அவரது வழக்கமான பதில்களுக்கு மாறாக இந்த கருத்து அமைந்துள்ளதால், கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் ஜனவரி 21ஆம் தேதி இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. அதன் பிறகு, ஜனவரி இறுதியில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். எனவே, முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்ற பின்னர் அவரது பொறுப்புகளை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார் என்கிறார்கள்.

அரச குடும்பத்தை சாராத காதல் மனைவியை கரம் பிடிக்கும் புருனே இளவரசர்!

தனது தந்தை வழியில் இளைஞர் அணி செயலாளர் பொறுப்புக்கும், பின்னர் அமைச்சர் பொறுப்புக்கும் வந்தவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகை ஸ்டாலின் போன்று கடினமானதாக இல்லை. அரசியலில் அடியெடுத்து வைத்த சிறிது காலத்திலேயே கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியப் பொறுப்பு அவரை தேடி வந்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில், அவரது செயல்பாடுகளும் உள்ளன. தேர்தல் சமயத்தில் அவரது பிரசாரங்கள் திமுகவுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்தது. தனது தொகுதியில் பம்பரமாக சுற்றி களப்பணியாற்றி தொகுதி மக்களிடையே நற்பெயரும் எடுத்துள்ளார்.

ஆட்சி நிர்வாகத்தில் பங்கேற்று உதயநிதி சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் சென்றுள்ளதாக தலைமை செயலக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், சனதான தர்மம் குறித்து பேசி அக்கருத்துக்களில் இருந்து பின்வாங்காமால் திமுகவின் கொள்கையிலும் தன்னை திடமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இந்த விஷயங்கள் அனைத்தையும் தொடக்கம் முதலே கவனித்து வரும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதிக்கு அடுத்தக்கட்ட புரொமோஷன் வழங்க டிக் அடித்து, அதனடிப்படையில் துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளது என்கிறார்கள்.

click me!