ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி; மீன் பிடிக்க நண்பர்களோடு சென்றபோது சோகம்...

First Published Mar 7, 2018, 1:03 PM IST
Highlights
Two students killed by drowning in the lake Tragedy when you go with friends to catch fish ...


சேலம்

 

சேலத்தில் மீன் பிடிக்க சென்றபோது அல்லிக்குட்டை ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

 

சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கணேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு சம்பூரணம் என்ற மனைவி உள்ளார். இவர்களது 2-வது மகன் தேவா (9). மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவநாதன் மகன் சச்சின் (12). இருவரும் நண்பர்கள்.

 

அதிகாரிப்பட்டி பிரதான சாலையில் உள்ள அரசு பள்ளியில் தேவா 4-ஆம் வகுப்பும், சச்சின் 6-ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

 

தற்போது பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால் மற்ற மாணவர்களுக்கு காலையில் வகுப்புகள் கிடையாது. இதனால் நேற்று காலை நண்பர்களான தேவா, சச்சின் உள்பட ஐந்து பேர் அம்பேத்கர் காலனியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லிக்குட்டை ஏரிக்கு சென்றனர்.

 

பின்னர், அவர்கள் ஏரிக்குள் இறங்கி மீன் பிடித்ததானராம். பிடித்த மீன்களை அவர்கள் பாட்டிலில் அடைத்து வைத்துள்ளனர். அப்போது தேவா, சச்சின் ஆகியோர் ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தனர்.

 

இதனைக் கண்டு சக நண்பர்கள் அலறினர். அவர்களுடைய சத்தத்தை கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் தேவா, சச்சின் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த வீராணம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அங்கு தேவா, சச்சின் ஆகியோரது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

click me!