
ஓமலூர் அருகே பாம்பை காப்பாற்றும் முயற்சியில் நடைபெற்ற விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்திற்கு காரணமான பாம்பும் உயிரிழந்தது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாச சமுத்திரம் பகுதியில் இரண்டு லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது.
முதலில் சென்ற லாரி மக்காச்சோளத்தையும், பின்னால் வந்த லாரி இரும்பு தகடுகளையும் ஏற்றி வந்தது.
முதலில் வந்த லாரியை தனசேகர் என்பவர் ஓட்டி உள்ளார். அதைத் தொடர்ந்து வந்த லாரியில் ஓட்டுனர் தங்கதுரை மற்றும் அவரது உதவியாளர் ரமேஷூம் இருந்துள்ளனர்.
அப்போது, தனசேகர் ஓட்டிச் சென்ற லாரியின் முன் சாரைப்பாம்பு ஒன்று திடீரென சாலை குறுக்கே வந்துள்ளது. இதைபார்த்த தனசேகர் பாம்பை காப்பாற்ற திடீரென பிரேக் அடித்துள்ளார்.
இதனால் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒட்டுனர் தங்கத்துரையும் பிரேக் பிடிக்க லாரியில் இருந்த இரும்பு தகடுகள் முன்புறத்தை நோக்கி பாய்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் தங்கதுரையும், உதவியாளர் ரமேஷும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமான பாம்பும் உயிரிழந்தது.
இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.