
திண்டுக்கல்
திண்டுக்கல்லில், காதல் திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் மணமகன் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பாரதிபுரம் சந்தை சாலையைச் சேர்ந்த மணிகண்டன் மகன் விக்னேஷ் என்ற விக்கி (21). இவருடைய நண்பர் ஷேக் (22). இவர், திண்டுக்கல் நாகல்நகர் ரௌண்டானா அருகே தள்ளுவண்டியில் மீன், கோழிக்கறி பொறித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் விக்னேஷ் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை வழக்கம்போல விக்னேசும், ஷேக்கும் கடையில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடையின் பின்புறமாக மர்ம நபர்கள் நால்வர் நின்று கொண்டிருந்தனர். இதனை கவனிக்காமல் விக்னேஷ் அங்கிருந்த சிலிண்டர் மேல் அமர்ந்திருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் அரிவாள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் விக்னேஷை சரமாரியாக வெட்டினர்.
இதனைப் பார்த்த ஷேக், அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் அதற்குள் விக்னேசின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து அந்த மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.
இந்தச் சம்பவத்தை பார்த்த மக்களும் ஓட்டம் பிடித்தனர். இதில், பலத்த காயம் அடைந்த விக்னேஷ் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தெற்கு காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விக்னேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நகர் காவல் துணை கண்காணிப்பாளர் சிகாமணி, ஆய்வாளர்கள் சபியுல்லா, சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தெற்கு காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெட்டிக் கொல்லப்பட்ட விக்னேசுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகிறது. இவர், காதல் திருமணம் செய்துள்ளார். அவருடைய மனைவி பாண்டீஸ்வரி (18).
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரிக்கும், விக்னேசுக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விக்னேஷ் காதல் பிரச்சனையில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.