
கண்ணமங்கலம்,
திருவண்ணாமலையில், மொபட் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கணவன், மனைவியிடம் சங்கிலியைப் பறிக்கும்போது வாகனத்தில் இருந்து கீழே விழுந்த மனைவி இறந்த வழக்கில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலையில் உள்ள கலசபாக்கம் அருகே உள்ள கீழ்வன்னியனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவாசகம் (50). இவருடைய மனைவி சாந்தி (45). கணவன், மனைவி இருவரும் சம்பவத்தன்று மொபட்டில் சென்றனர். கண்ணமங்கலத்தை அடுத்த பால்வார்த்து வென்றான் கிராமம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் சாந்தியின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த நகை பறிப்பு சம்பவத்தின் போது மொபட்டில் இருந்து கணவன், மனைவி இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்த சாந்தி சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சாந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சந்தவாசல் காவலாளர்கள் முதலில் நகை பறிப்பு வழக்காகவும், பின்னர் கொலை வழக்காகவும் மாற்றினர்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி உத்தரவின்பேரில், கூடுதல் கண்காணிப்பாளர் ரங்கராஜன் மேற்பார்வையில், ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, கண்ணமங்கலம் ஆய்வாளர் முரளிசுந்தரன், சந்தவாசல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தீவிர சோதனையில் ஈடுபட்ட காவலாளர்கள், வாகன சோதையின் போது வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஆரணி சின்னசாய தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் யுவராஜ் (20), சேத்துப்பட்டு கிழக்குமேடு கிராமத்தை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் விஜய் (20) என்பதும், இவர்கள் இருவரும்தான் கணவருடன் மொபட்டில் சென்ற சாந்தியிடம் தங்கச்சங்கிலி பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காவலாலர்கல் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.