“மருதமலை படத்தை போல் சுவாரஸ்ய சம்பவம்”.. 5 பேரை திருமணம் செய்த பெண் - திருச்சி சரக போலீசார் திணறல்

First Published Nov 28, 2016, 10:04 AM IST
Highlights


மருதமலை திரைப்படத்தில், போலீஸ்காரராக இருக்கும் வடிவேலு, காவல் நிலையத்தில் ஒரு தம்பதியிடம் விசாரிப்பார். அப்போது, அந்த பெண்ணுக்கு 5 கணவன்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைவார். அதேபோன்ற சம்பவம் திருச்சி அருகே திருவெறும்பூரில் நடந்தது. இந்த சம்பவத்தில் போலீசார் திணறிவிட்டனர்.

திருச்சி திருவெறும்பூர் மலைக்கோயில் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன். (அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவரும், மஞ்சு (23) என்ற இளம்பெண்ணும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த வினோத் என்பவர், மேகநாதன் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றார். அங்கு மாலதி தனது மனைவி எனக் கூறி தகராறில் ஈடுபட்டார். இதில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு, திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு புகார் சென்றது.

போலீஸார் 3 பேரிடமும் விசாரணை நடத்தியதில், கடும் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது.

திண்டுக்கல் மாவட்டம், விலாம்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகள் மஞ்சு. அதே பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஒரு சமயம், ஸ்டீபன் குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்றார்.

அப்போது, அங்குள்ள டீக்கடையில் வேலை பார்த்த நவநீதம் என்பவருடன் மஞ்சுவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து மஞ்சு, தனது குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு வேளாங்கண்ணியில் நவநீதத்துடன் குடும்பம் நடத்தினார்.

அங்கு இருந்தபோது, நாகையை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடனும் சிறிது காலம் வாழ்ந்தார். பின்னர் திருப்பூருக்கு வேலைக்கு சென்ற மஞ்சு, அங்கு வினோத் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு, ஒன்றரை ஆண்டு குடும்பம் நடத்தியுள்ளார்.

இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், மன நிம்மதிக்காக திருச்சி சமயபுரம் கோயிலுக்கு வந்தபோது, அங்கு வினோத்தின் நண்பரான திருவெறும்பூர் மேகநாதன்னுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மேகநாதனை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த வினோத் திருவெறும்பூர் வந்து அசோக்கிடம் தகராறில் ஈடுபட்டார்.

அவர்களுக்குள் கடும் மோதல் ஏற்பட்டு, அடிதடி ஆனது. இதுபற்றி எங்களுக்கு வந்த புகரின் அடிப்படையில், 3 பேரையும் அழைத்து விசாரித்தோம். அதில் இதுபோன்ற அதிர்ச்சி தகவல் வந்தது.

பின்னர், அவர்களை சமரசம் செய்தபோது, இறுதியாக வினோத்தும், மேகநாதனும் மஞ்சு ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். இதனால, அவருக்கு அறிவுரை கூறி, சொந்த ஊருக்கு அவரை அனுப்பினோம் என்றனர்.

மருதமலை திரைப்படத்தில் போலீஸ்காரராக நடித்த வடிவேலு, காவல் நிலையத்தில் ஒரு பெண்ணை விசாரிக்கும்போது, அவருக்கு 5 கணவன்கள் இருப்பது தெரியவரும். அதேபோல, மஞ்சுவை விசாரித்தபோது 5 கணவர்கள் இருப்பது தெரியவந்தது என போலீசார் கூறுகின்றனர்.

click me!