"Tomato price" : தக்காளி விலை மேலும் குறையுமா..? சென்னை உயர்நிதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

By Thanalakshmi VFirst Published Nov 29, 2021, 3:32 PM IST
Highlights

தக்காளி ஏற்றிவரும் லாரிகளை நிறுத்துவதற்கு ஒரு ஏக்கர் பரப்பளவிற்குக் குறையாத இடத்தை ஒதுக்க வேண்டுமென கோயம்பேடு மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

"Tomato price" : அண்மையில், தொடர்கனமழை காரணமாக, தமிழகத்தில் உள்ள முக்கிய சந்தைகளுக்கு வரும் வழக்கத்தை விட கணிசமான அளவில் தக்காளின் வரத்து குறைந்தது. இதனால், எதிர்பாராதவிதமாக , தக்காளின் விலை பன்மடங்கு உயர்ந்தது. கிட்டதட்ட ஒரு கிலோ தக்காளின் விலை ரூ. 150 வரை விற்பனையானது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கிலோ தக்காளியின் விலை சதம் அடித்தது.

விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு பசுமை பண்ணை நுகர்வோர் மையங்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யபடும் என்று அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 60 க்கும் மேற்பட்ட பசுமை பண்ணைகளில், தக்காளி கிலோவிற்கு ரூ.80 க்கு விற்பனை செய்யபட்டது. மேலும் நகர்புற மற்றும் அதனை சுற்றியுள்ள குறிப்பிட்ட நியாயவிலை கடைகளிலும் தக்காளி, காய்கறிகள் விற்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. மேலும் அதற்கான விலைபட்டியலும் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் கோயம்பேடு தக்காளி மைதானத்தைத் திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சென்னை உயர் நிதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில் வாகனங்களை நிறுத்தக்கூடிய இடத்தில் சிறு கடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தக்காளி மைதானம் திறக்கப்பட்டால் தக்காளி கிலோவிற்கு ரூ.40 க்கு விற்கமுடியும் என்று வியாபாரிகள் தரப்பில் சொல்லபட்டது.

தக்காளி விலை உயர்வைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக வாகனங்ளை நிறுத்த அனுமதிக்க முடியுமா என சி.எம்.டி.ஏ. மற்றும் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி ஆகியவற்றிற்கு நீதிபதி கேள்வியெழுப்பிருந்தார். இந்த நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்க்கெட் கமிட்டி தரப்பில், 800 வாகனங்ளை 8 இடங்களில் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் உள்ளதாக தெரிவித்தது. இந்தச் சங்கத்தினரை அனுமதிக்காததால்தான் விலை உயர்ந்தது எனக் கூறுவது தவறு என்றும், அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் எவரும் தடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடந்த வாரத்தை விட தக்காளி விலை தற்போது குறைந்துள்ளதாகவும் , தக்காளி விற்பனை இடத்திற்கு அருகில் உள்ள ஏ சாலை எஃப் பிளாக் அருகில் உள்ள இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கமிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தக்காளியை லாரியிலிருந்து சிறு வாகனங்களுக்கு மாற்ற மட்டுமே இந்த காலி மைதானத்தைப் பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்ய மாட்டோம் எனவும் வியாபாரிகள் சங்கம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கபட்டது.

இவற்றைப் பதிவு செய்த நீதிபதி, தக்காளி விலையைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், தற்காலிகமாக ஒரு ஏக்கருக்கும் குறையாத இடத்தை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வியாபாரிகளும் பொருட்களை ஏற்றவும் இறக்கவும் மட்டும் நான்கு வாரங்களுக்கு இடைக்காலமாக ஒதுக்கும்படி மார்க்கெட் கமிட்டிக்கு உத்தரவிட்டார். நாளை முதல் அந்த இடத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

சோதனை முறையில் இரண்டு வாரங்களுக்கு இந்த நடைமுறையைக் கடைப்பிடித்து, அதில் உள்ள சாதக பாதகங்களை இருதரப்பும் இரண்டு வாரங்களுக்கு பின் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கபட்டது. தொடர் மழை, வரத்துக் குறைவு, பிற மாநில வாகனங்கள் வராதது போன்ற காரணங்களால் அதிக அளவில் உயர்ந்துள்ள தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

click me!