
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதையடுத்து கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதியே கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னையில் நேற்று முன்தினம் மாலை ஆரம்பித்த கனமழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக 38டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.