Group 1 Results : வெளியானது TNPSC குரூப் 1 ரிசல்ட்… தேர்ச்சிப்பெற்றவர்களுக்கு மார்ச்சில் முதன்மைத் தேர்வு!!

By Narendran SFirst Published Dec 14, 2021, 9:18 PM IST
Highlights

தமிழ்‌நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ சார்பில் நடத்தப்படும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

தமிழ்‌நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ சார்பில் நடத்தப்படும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டோருக்கு 2022 மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் முதல்நிலைத் தேர்வு எழுதிய 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேரில், முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்டோருக்கு 2022 மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல முதன்மைத் தேர்வுக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களின் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கிரண் குராலா அறிவித்துள்ளார். இந்த சான்றிதழ் பதிவேற்றம் டிசம்பர் 12 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வரை நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்‌ 03.01.2021 அன்று நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத்‌ தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள்‌ தமிழ்‌ வழியில்‌ பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில்‌ கோரியுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தமிழ்‌ வழியில்‌ பயின்றதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!