
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதில், சட்டப் பேரவையில் இரண்டாவது முறை நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட முக்கிய மசோதாவான தமிழ்நாடு நிதி நிர்வாகப் பொறுப்புடைமை மசோதாவும் அடங்கும்.
தமிழ்நாடு நிதி நிர்வாகப் பொறுப்புடைமை மசோதா, 2024 என்ற மசோதாவை ஆளுநர் முதலில் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான மசோதா, சிறு குற்றங்களுக்குச் சிறைத் தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உட்பட மொத்தம் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகப் பொறுப்புடமை சட்ட மசோதா கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி மசோதாவைக் குறித்து முடிவெடுக்காமல் வைத்திருந்து, பின்னர் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி, மசோதாவைத் திருப்பி அனுப்பினார்.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததற்கான காரணங்களையும் அவர் பேரவைத் தலைவர் மு. அப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும், மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அந்த மசோதாவை மறு ஆய்வு செய்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அண்மையில் சட்டப் பேரவையில் மீண்டும் தாக்கல் செய்தார்.
அப்போது, எந்தவித எதிர்ப்புமின்றி, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா மீண்டும் நிறைவேறியதாகப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்தார்.
தற்போது ஒப்புதல்:
சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட இந்த முக்கிய மசோதா உட்பட, மொத்தம் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.