
TNSTC special buses for festivals : திருப்பதி பிரம்மோத்ஸவம் மற்றும் குலசேகரப்பட்டிணம் தசரா பண்டிகைக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து செல்ல பக்தர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். இதனையடுதுத பக்தர்களின் வசதிக்காக இந்த இரண்டு கோயில்களுக்கும் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் ள்ள குலசேகரபட்டிணத்தில் நடைபெறவுள்ள தசரா பண்டிகையை முன்னிட்டு 23/09/2025 முதல் 03/10/2025 வரை சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணத்திற்கும் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக 01/10/2025 முதல் 03/10/2025 கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து திரும்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி பேருந்து வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதே போல திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இந்த வருடம் திருப்பதி திருமலையில் பிரம்மோத்ஸவம் திருவிழா நடைபெற உள்ளது.
இத்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டிணம், செங்கோட்டை, மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு 22/09/2025 முதல் 06/10/2025 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்வதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.