
கரூர்
அரவக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மின்னல் வேகத்தில் மோதியதில் நண்பர்கள் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் தீபக் (21). இவரது நண்பர்களான மார்க்கண்டாபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் சரவணக்குமார் (29), ஈசநத்தம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (21) ஆகிய மூவரும் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் அம்மாபட்டியிலிருந்து, கூம்பூருக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சாமிநாதபுரம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மின்னல் வேகத்தில் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட தீபக், சரவணக்குமார், மாரிமுத்து ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி காவலாளர்கள் இறந்தவின் உடல்களைக் கைப்பற்றி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தப்பியோடிய டிப்பர் லாரி ஓட்டுநரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.