புதுக்கோட்டை
புதுச்சேரியில் இருந்து மூட்டை மூட்டையாய் கடத்தி வரப்பட்ட 435 சாராய புட்டிகளை காவலாளார்கள் சோதனையின்போது பறிமுதல் செய்து அதனை கடத்திவந்த மூன்று பெண்களையும் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் காவலாளர்கள் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து மீமிசல் நோக்கி சென்ற ஒரு அரசு பேருந்து ஜெகதாப்பட்டினம் பேருந்து நிலையத்தில் வந்து நின்றது.
அதிலிருந்து மூன்று பெண்கள் மூட்டைகளுடன் இறங்கினர். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் அந்த மூன்று பெண்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தனர்.
இதில் சந்தேகமடைந்த காவலாளர்கள் அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் புதுச்சேரியில் இருந்து 435 சாராய புட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த சாராய புட்டிகளை காவலாளர்க்கள் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அவர்கள் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த விநாயகம் மனைவி செல்வி (45), செல்வம் மனைவி ராமாயி (50), மலைராஜ் மனைவி ராஜேஸ்வரி (40) என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராய புட்டிகளை வாங்கி கொண்டு, பட்டுக்கோட்டைக்கு வந்து, அங்கிருந்து பேருந்தில் ஜெகதாப்பட்டினம் வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த மூன்று பெண்களையும் காவலாளர்கள் கைது செய்தனர். பின்னர் ஆலங்குடி மதுவிலக்கு காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதன்பேரில் அவர்கள் வந்து, மூன்று பெண்களையும் அழைத்து சென்றனர்.