சென்னையில் பரபரப்பு... போலீசாரின் திடீர் ரெய்ட்... நாட்டுத் துப்பாகியுடன் மூவர் கைது!!

By Narendran SFirst Published Jan 8, 2022, 9:22 PM IST
Highlights

சென்னை அருகே தனியார் விடுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் தங்கியிருந்த இருவர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சென்னை அருகே தனியார் விடுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் தங்கியிருந்த இருவர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக கிண்டி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் ரேஸ் கோர்ஸ்-க்குச் சென்ற போலீஸார் அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற பாபநாசம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சின்னதரை தானும் தனது நண்பரான தென்காசி பகுதியைச் சேர்ந்த மாரி செல்வமும், திருநெல்வேலியில் இருந்து சென்னை வந்ததாகவும், குரோம்பேட்டையில் உள்ள தனது உறவினர் சார்லஸ் என்பவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு கிண்டி தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீதுள்ள சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர் தங்கியிருந்த கிண்டி தனியார் விடுதிக்குச் சென்று சின்னதுரை தங்கியிருந்த அறையை பார்வையிட்ட போது அங்கு சின்னதுரையின் நண்பரான மாரி செல்வமும், சின்னதுரையின் உறவினரான சார்லஸும் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சார்லஸ் தன்னை மாரிசெல்வம் மது வாங்கி வரச்சொன்னதால் அவருக்கு மது வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

எனினும் அவர்களின் பேச்சில் சந்தேகம் எழுந்ததால் போலீசார் அவர்களின் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர். சோதனையில் மாரி செல்வத்துக்குச் சொந்தமான பையில் நாட்டுத் துப்பாக்கியொன்று இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நாட்டுத் துப்பாக்கி குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது செங்கோட்டையைச் சேர்ந்த சின்னதுரையின் நண்பரான தீபுவின் தந்தை முன்னாள் வனத்துறை அதிகாரியாக இருந்தவர் எனவும், அவர்களது வீட்டிற்குச் சென்றபோது தீபு நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்டு அதனை தங்களுக்கு வேண்டும் எனக்கூறி வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.  மேலும், நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக சென்னை வந்ததும் நாட்டுத் துப்பாக்கியை குரோம்பேட்டையில் உள்ள சார்லஸின் வீட்டில் வைத்துவிட்டு மறுநாள் காலை மீண்டும் அதை பெற்றுக்கொண்டு தனியார் விடுதிக்கு வந்து சின்னதுரையும், மாரி செல்வமும் நாட்டுத் துப்பாக்கியை உடமைகளுக்குள் பதுக்கி வைத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து துப்பாக்கியின் தோட்டாக்கள் ஏதும் அவர்களிடம் உள்ளதா என்பதை சோதனை செய்த போலீசார் தோட்டாக்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்தியபின் அம்மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக போலீசாரின் விசாரணையில் மாரி செல்வம் (29) மீது கரிவலம் காவல் நிலையம் மற்றும் சிவகிரி காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சின்னதுரை (32) மீது தென்காசி, குற்றாலம் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மற்றொரு நபரான சார்லஸ் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இல்லையென்றாலும் இம்மூவரும் கூட்டு சேர்ந்து யாரையேனும் கொல்ல திட்டம் தீட்டி நாட்டுத் துப்பாக்கியுடன் தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்தனரா? என்ற கோணத்தில் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!