
சுற்றுலாப் பயணிகளின் வருகையால், லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கோடை வறட்சியால், ஏரியில் நீர் குறைந்து இருக்கும் பறவைகளும் சிறகடித்து பறந்துவிடுவதால் சரணாலயம் வெறிச்சோடியது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இது தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களின் ஒன்று.
கடந்த 1858-ல் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தப் பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டது.
ஏரியின் மையப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கின்றன. குறிப்பாக, கடம்பா, கருவேல மரங்கள் உள்ளதால் அவற்றின் கிளைப் பகுதியில் பறவைகள் கூடுகட்டி தங்கிச் செல்லும்.
பருவநிலை மற்றும் இனவிருத்திக்கு சாதகமாக இருப்பதால் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் இங்கு வந்து கண்ணுக்கு விருந்தளிக்கும்.
சைபிரியா, இந்தோனேஷியா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், மங்கோலியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும், இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மைல் தாண்டி பறவைகள் வருகை தரும்.
நீர்காகம், பாம்புதாரா, நீர்கொத்தி நாரை, வெள்ளை நாரை, சாம்பல் நிறம் கொண்ட கூழை காடா, சாம்பல் நாரை, வெண்கொக்கு ஊசிவால் நாரை, வக்கா, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட பல வகையான பறவைகள் இங்கு வரும் விருந்தாளிகள்.
இவை, அப்பகுதி நிலங்களில் விளையும் நெல், பருப்பு, நீர்நிலைகளில் வாழும் மீன்களையும் உண்டு வாழ்கின்றன. பறவைகளின் எச்சம் இங்குள்ள விளைநிலங்களுக்கு இயற்கை உரங்களாக அமைந்துவிடுவதால் பயிர்களை பூச்சிப் புழுக்கள் தாக்குவதில்லை.
இங்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளின் சீசன் காலமாகும். சீசன் தொடங்கியதும் தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பள்ளி மாணவர்களும் வந்துச் செல்வது வழக்கம்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வேடந்தாங்கல் ஏரியில் நீர் குறைந்து வருகிறது. இதனால், தற்போது ஆயிரத்துக்கும் குறைவான பறவைகளே வாழ்கின்றன. பெரும்பாலான பறவை இனங்கள் வேறு இடங்களுக்கு பறந்துவிட்டன.
கடந்த 2016 அக்டோபர் மாதம் சீசன் தொடங்கியதில் இருந்து, 2017 மார்ச் 20 வரை 58 ஆயிரம் பெரியவர்களும், 22 ஆயிரம் சிறியவர்களும் பறவைகளைப் பார்வையிட்டு உள்ளனர். இதன் மூலம் நுழைவுக் கட்டணம், பைனாகுலர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வருவாயாக ரூ.3 இலட்சத்து 32 ஆயிரத்து 469 கிடைத்துள்ளது.
கடந்த நவம்பரில் தொடங்க வேண்டிய சீசன், முன்கூட்டியே அக்டோபர் மாதத்தில் தொடங்கியது.
சீசன் காலத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கம் மேற்பட்ட பறவைகள் வருகை தரும் நிலையில், கோடை வெப்பத்தாலும், ஏரியில் போதிய நீர் இல்லாததாலும் ஒரு சில பறவை இனங்கள் வெளியேறி விட்டன.
ஒவ்வொரு சீசனுக்கும் இலட்சக் கணக்கில் பணம் செழிக்கும் சரணாலயம், இந்தமுறை கோடை வெப்பத்தால் பறவைகள் வெளியேறி வருவது சுற்றுலாப் பயணிகளின் வருகையயும் வெகுவாக குறைத்து விட்டது.