குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மக்கள் அனைவரும் அவசியம் ஒத்துழைக்க வேண்டும் என்று அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மக்கள் அனைவரும் அவசியம் ஒத்துழைக்க வேண்டும் என்று அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சி மன்றங்களிலும் நேற்று கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது. மணக்கால் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் விஜயலட்சுமி பேசியது: "பிளாஸ்டிக் பயன்பாட்டால் அதிக தீமைகள் உண்டாவதால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரியலூரை முழுச் சுகாதாரத்தோடு வைத்துக்கொள்ள அனைவரும் கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்" என்று பேசினார்
இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில், "பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைத் தடைச் செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், 2020, அக்டோபர் 2-க்குள் அந்தியோதயா இயக்கம் முழு இலக்கினை அடையச் செய்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதிச் செலவினம்,
குடிநீரைச் சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்துதல், டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, தூய்மைக் கணக்கெடுப்பு, திடக்கழிவு மேலாண்மை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டச் செயல்பாடுகள்" போன்றவைக் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகேஷ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகிலா, ஜாகீர் உசேன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.