70 வயது மூதாட்டியிடம் நகை திருடிய நான்கு பெண்கள் கைது; பேருந்து பயணித்தின்போது கைவரிசை...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 16, 2018, 1:14 PM IST
Highlights

அரியலூரில், பேருந்தில் பயணித்த 70 வயது மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறித்த நான்கு பெண்களை காவலாளர்கள் கைது செய்தனர். 

அரியலூரில், பேருந்தில் பயணித்த 70 வயது மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறித்த நான்கு பெண்களை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் அருகேவுள்ளது ஆண்டிமடம். இங்குள்ள விளந்தைச் சாவடி தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. 70 வயது நிரம்பிய இவர் நேற்று காலை 9 மணிக்கு ஆண்டிமடம் நான்கு சாலையில் நகரப் பேருந்து ஒன்றில் ஏறினார். 

நடத்துநரின் அருகில் சென்ற ஜெயலட்சுமி, பயணச் சீட்டு எடுக்க தன்னிடம் இருந்த சுருக்குப் பையை திறக்க முற்பட்டார். அப்போது தன்னுடைய கழுத்தில் கிடந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலி காணாததால் அலறினார். பின்னர், நகையை திருடிட்டாங்க! நகையை திருடிட்டாங்க! என்று அழுதார். 

இதனைத் தொடர்ந்து நடத்துநர், ஜெயலட்சுமியை சமாதானப்படுத்தி பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு ஓட்டுநரிடம் சொன்னார். பேருந்தை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், காவலாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார் ஜெயலட்சுமி. 

பேருந்து முழுவதும் இருந்த பயணிகளை சோதித்த காவலாளர்கள், அதில், சந்தேகம் தரும் வகையில் இருந்த நான்கு பெண்களிடம் விசாரணை நடத்தினர். இதில், இவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே அவர்களை போலீஸ் பாணியில் விசாரித்தனர்.

அந்த விசாரணையில், அந்த நான்கு பெண்கள்தான் ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைத் திருடியுள்ளனர் என்பது தெரிந்தது. அவர்கள், ஏர்வாடியைச் சேர்ந்த ரவி மனைவி சுப்பு, சுரேஷ் மனைவி இசக்கியம்மாள், ராஜா மனைவிகள் ராணி மற்றும் ரம்யா என்பதும் விசாரணையில் தெரிந்தது. 

அவர்கள் நாலவர் மீதும் வழக்குப்பதிந்த காவலாளர்கள் அவர்களை கைது செய்தனர். அவர்களுக்கு இதற்குமுன் எதாவது திருட்டில் தொடர்புள்ளதா? என்று காவலாளர்கள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

click me!