சேலம்
குடிநீர் கேட்டு நங்கவள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலம் ஆட்சியரிடம் பெண்கள் கோரினர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடந்தது.
இதில், மேட்டூர் தாலுகா தோரமங்கலம் கிராமம் அருணாசல நகரைச் சேர்ந்த பெண்கள் பலர் ஆட்சியர் அலுவலகத்துக்கு குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை தடுத்து நிறுத்திய காவலாளர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களில் சிலரை மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க அனுமதித்தனர்.
அவர்கள் ஆட்சியரிடத்தில் கொடுத்த மனுவில், "எங்கள் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் இதுவரை இங்கு எந்தவித குடிநீர் வசதியும் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது.
குடிநீர் கேட்டு நங்கவள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்களின் நலன் கருதி எங்கள் பகுதிக்கு விரைவில் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியுள்ளனர்.