மருத்துவ தரவரிசை பட்டியலில் குளறுபடி.. வரிசையாக கிளம்பும் புகார்கள்.. அதிர்ச்சி தகவல் !!

By Raghupati RFirst Published Jan 28, 2022, 7:41 AM IST
Highlights

தமிழக அரசு வெளியிட்டுள்ள மருத்துவ தரவரிசை பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார்கள் கிளம்பியிருக்கிறது.

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரத்து 349 இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 650 இடங்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அரசு கல்லூரியில் 200 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 1,760 இடங்கள் என மொத்தம் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

இந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 19-ந் தேதி தொடங்கி ஜனவரி 7-ந் தேதி வரை ‘ஆன்லைன்’ மூலம் பெறப்பட்டன. அதன்படி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டார்.

மேலும் அவர், அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் பெயர் பட்டியலையும், முதல் 10 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பெயர்களையும் வெளியிட்டார். அப்போது தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, கூடுதல் இயக்குனர் டாக்டர் வசந்தா மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘2021-22-ம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான மொத்த இடங்கள் 7,825. அதில் மாநில அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு 6 ஆயிரத்து 999. அரசு பல் மருத்துவம் மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் 1,960. இதில் மாநில அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு 1,930 ஆகும்.

அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு (பொதுப்பிரிவு) மொத்தம் 25 ஆயிரத்து 595 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 16 ஆயிரத்து 74 மாணவர்கள், 8 ஆயிரத்து 875 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 949 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 16 ஆயிரத்து 29 மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டத்திலும், 8 ஆயிரத்து 543 மாணவர்கள் மத்திய அரசின் கல்வி திட்டத்தின் (சி.பி.எஸ்.இ.) மூலமாகவும் படித்தவர்கள். சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 15 ஆயிரத்து 259 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இதில் 14 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 586 பேரும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 106 பேரும் படித்தவர்கள். மருத்துவ படிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 27,28, 29-ந் தேதிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 30-ந் தேதி முதல் ‘ஆன்-லைன்’ (www.tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net) மூலம் தொடங்கி நடைபெற உள்ளது.

‘ஆன்லைன்’ கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி என்பது குறித்து மாணவ-மாணவிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய வீடியோ பதிவு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இது விரைவில் வெளியிடப்படும். இந்த வழிகாட்டு நெறிமுறை களை படித்து மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறும்’ என்று கூறினார்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த கரிக்காப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. தறி தொழிலாளி, இவரது மகள் கஸ்தூரி (வயது 19). இவர் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒரு மனுவை கொடுத்தார். பின்னர் மாணவி கஸ்தூரி கண்ணீர் மல்க கூறியதாவது, ‘ 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நான் அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றேன். ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2020-ம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு, கடந்த 2021-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதினேன். அதில் 252 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது வெளியிடப்பட்டுள்ள மருத்துவ தரவரிசை பட்டியலில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எனது பெயர் இடம் பெறவில்லை. அதேசமயம், என்னை விட குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7. 5 சதவீத இட ஒதுக்கீடுபடி எம். பி. சி. பிரிவில் 230 மதிப்பெண் பெற்றாலே போதுமானது. ஆனால், 252 மதிப்பெண்கள் பெற்றும் எனது பெயர் இடம் பெறாதது வேதனை அளிக்கிறது. 

மாறாக பொதுப்பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் அரசின் சலுகை கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு பறி போய் விட்டது. பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் மருத்துவம் படிக்க லட்சக்கணக்கில் பணம் செலவாகும். எனது பெற்றோர் தறி தொழிலாளிகள் என்பதால் அதிக பணம் கொடுத்து படிக்க முடியாக நிலை உள்ளது. குளறுபடிகளை களைந்து பொதுப்பட்டியலில் உள்ள எனது பெயரை அரசு ஒதுக்கீடு பட்டியலுக்கு மாற்றி மருத்துவம் படிக்க உதவ வேண்டும்’ என்று மனுவில் கூறியிருக்கிறார்.

இது குறித்து சேலம் மவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகனிடம் கூறிய போது, ‘சேலம் மாவட்டத்தில் இதுபோல் பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் வழங்கிய புகார் மனுக்கள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதுகுறித்து அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.

click me!