சென்னை எழும்பூரில் இருந்து ஹைடெக் வசதியுடன் மதுரைக்கு விரைவில் சொகுசு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தமிகத்தின் தென் மாவட்ட பகுதிகளான மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு போதுமான ரயில்கள் இயக்கப்படவில்லை என தென் மாவட்ட மக்களுக்கு நீண்ட நாட்களாக மனக்குறை இருந்து வருகிறது.
இந்நிலையில் LED திரைப் பொருத்தப்பட்ட சொகுசான இருக்கைகள், வைஃபை மற்றும் உயர்தரமான கழிவறைகளைக் கொண்ட தேஜஸ் ரயில், சென்னை ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு, வில்லிவாக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
மணிக்கு 70கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில், சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு வாரத்திற்கு ஐந்து நாட்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், ஆறரை மணி நேரத்தில் மதுரையைச் சென்றடையும் என கூறப்படுகிறது. திரும்பவும் இரவு மதுரையில் இருந்து சென்னைக்கு இந்த ரயில் இயக்கப்படும்.
தேஜஸ் ரயில் தொடக்கத்தில் ல் சிறப்பு ரயிலாக செயல்படும் எனவும், பின்னர் வழக்கமாக இயக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.