
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெளிநாட்டிலிருந்து வந்த கணவரை தீர்த்துக்கட்டி பிணத்தை வீட்டின் கழிவறை தொட்டியில் வீசிய பெண் 11 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம் பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர், கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி சுதா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராஜசேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்த அவர், அதன் பின்பு திடீரென காணாமல் போய்விட்டார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சுதாவிடம் கேட்டனர். அப்போது, ராஜசேகர் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டதாக சுதா மழுப்பி வந்துள்ளார். ஆனால், ராஜசேகர் அதன் பின்பு பலவருடங்களாக ஊருக்கு வரவேயில்லை.
இதனால், தம்பி மனைவி சுதா மீது அவருடைய அண்ணன் ரவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரவி, தம்பி ராஜசேகர் மாயமாகி இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜசேகர் கொடூரமாக கொல்லப்பட்டது விசாரணையில் அம்பலமானது.
கடந்த 2007-ம் ஆண்டு ராஜசேகர் பேராணிவிளை பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்த போது, அவரது மனைவி சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆன்றின் ஷிபு என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த விவகாரம் ராஜசேகருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் சுதாவும், ஆன்றனி ஷிபுவும் ஒன்றாக இருந்ததை ராஜசேகர் பார்த்துள்ளார். இதனால், தகராறு முற்றிய நிலையில் சுதாவும், கள்ளக்காதலன் ஆன்றனி ஷிபுவும் சேர்ந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு, பிணத்தை வீட்டின் பின் பகுதியில் உள்ள கழிவறை தொட்டியில் வீசி மூடிவிட்டது. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நேற்று தக்கலை போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த வீட்டுக்குச் சென்றனர். கழிவறை தொட்டி திறக்கப்பட்டு, ராஜசேகரின் உடலின் பாகங்களும், எலும்புகளும் சேகரித்து எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கணவனை கொலை செய்ததாக சுதாவையும், அவரது கள்ளக்காதலன் ஆன்றனி ஷிபுவையும், சம்பவம் நடந்து 11 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.