நடுரோட்டில் கழன்று ஓடிய பள்ளி பேருந்தின் சக்கரங்கள்; ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 40-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்...

First Published Dec 22, 2017, 9:00 AM IST
Highlights
The wheels of the school bus running out of the middle More than 40 people survived by the driver paln...


வேலூர்

வேலூரில் நடுரோட்டில் சென்றுக் கொண்டிருந்த பள்ளி பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் உயிர் தப்பினர்.

வேலூர் மாவட்டம், பாணாவரத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு எல்.கே.ஜி. முதல் பத்தாம் வகுப்பு வரை 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்தப் பள்ளியில் பாணாவரத்தைச் சுற்றியுள்ள ஆயல், சூறை, போலிப்பாக்கம், தப்பூர், தாங்கல், பொன்னப்பந்தாங்கல், பன்னியூர் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்கும், மீண்டும் வீட்டுக்குச் செல்வதற்காகவும் பள்ளி சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நேற்று காலை ஆயல், சூறை, போலிப்பாக்கம், தப்பூர் ஆகிய கிராமங்களில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் காமாட்சி, மீனாட்சி ஆகியோரை ஏற்றிக்கொண்டு தாங்கல் கிராமத்தில் மாணவ, மாணவிகளை ஏற்ற பள்ளி பேருந்து சென்றது.

பேருந்தை பாணாவரத்தைச் சேர்ந்த ஆதி (42) என்பவர் ஓட்டினார். இந்தப் பள்ளி பேருந்தில் பின்பக்கம் நான்கு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாங்கல் கூட்டுசாலை அருகே வளைவில் திரும்பும்போது பேருந்தின் பின்புறம் இடதுபக்கம் இருந்த இரண்டு டயர்கள் திடீரென கழன்று சாலையில் ஓடியது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் ஆதி பிரேக் போட்டு சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பேருந்து கவிழாமல் நடுசாலையிலேயே நின்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதனைக் கண்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் விரைந்து வந்து பேருந்தில் இருந்த மாணவ மாணவிகளை கீழே இறக்கிவிட்டு சாலையோரம் அமர வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணமூர்த்தி, குமார் மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  பின்னர், பள்ளியில் இருந்து வேறு பேருந்து வரவழைக்கப்பட்டு மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

 

click me!