பட்டியலின மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சமூக விரோதிகள்

By Velmurugan sFirst Published Dec 26, 2022, 3:27 PM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் அருகே பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட நிலையில், நீரை அருந்திய பலரும் வாந்தி, வயிற்றுபோக்கு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.

பட்டியலின சமூக மக்கள் மீது தாக்குதல், பட்டியலின மக்களின் வீடுகள் மீது தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களை நாம் பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்ததாக செய்திகளில் பார்த்திருப்போம். ஆனால் இவை அனைத்தையும் மிஞ்சும் விதமாக தமிழகத்தில் உச்சக்கட்டமான கொடூரம் அரங்கேறி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் அருகே இறையூர் வேங்கைவயல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை தான் அப்பகுதி மக்கள் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

துறைகளின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

இந்நிலையில் தொடர்ச்சியாக கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அப்பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட ஒவ்வாமை பிரச்சினைகள் இருந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை அணுகியபோது உணவு அல்லது குடிநீரில் ஏதேனும் பிரச்சினை இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறுகிய காலத்தில் கிராமத்தில் உள்ள அதிகமான மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஊர் மக்கள் தண்ணீர் தொட்டியில் ஏதேனும் விலங்கு இறந்து கிடக்கலாம் என்ற நோக்கத்தில் தண்ணீர் தொட்டியில் ஏறி பார்த்துள்ளனர். அப்போது தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,12,000 சம்பளத்தில் வேலை

உடனடியாக தொட்டியில் உள்ள தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு தொட்டியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!