
காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த நெசவுத் தொழிலாளியின் உடல் உறுப்புகள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி (48). நெசவுத் தொழிலாளியான இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு திலகம் என்ற மகளும், தினேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி அன்று, காஞ்சிபுரம் கச்சபேஸ்வர் கோயில் அருகே ரவி நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக், ரவி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில், பலத்த காயமடைந்த அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ரவி, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் ரவியின் உடல் உறுப்புகளான கண், இதயம், கிட்னி உள்ளிட்டவைகளை அந்த தனியார் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர்.
ரவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.