திருநெல்வேலி
திருநெல்வேலியில் குழாய் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தேநீர் கடைக் காரரை குத்திக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை செல்வமருதூர் பௌண்ட் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (51). இவர் திசையன்விளையில் தேநீர் கடை நடத்தி வந்தார்.
இவருக்கும், திசையன்விளை வணிக வைசியர் தெருவைச் சேர்ந்த சுப்பையா குடும்பத்தினருக்கும் பொதுக் குழாயில் குடி தண்ணீர் பிடிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 3.11.2014 அன்று பெருமாள், பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது பெருமாளுக்கும் சுப்பையா குடும்பத்தினருக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சுப்பையா, அவருடைய மகன் ஐயப்பன் (24) மற்றும் அதே ஊரை சேர்ந்த செல்லப்பா மகன் சுடலை சேகர் என்ற சுதாகர் (24) ஆகிய மூவரும் சேர்ந்து, பெருமாளை அடித்து உதைத்து, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து திசையன்விளை காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சுப்பையா, ஐயப்பன், சுடலை சேகர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
பின்னர், திருநெல்வேலி 3-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயராஜ், "குற்றம் சாட்டப்பட்ட ஐயப்பன், சுடலைசேகர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். சுப்பையா மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்கிறேன்" என்று நேற்று தீர்ப்பளித்தார்.