தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு பெய்த மழை, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது, தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருவது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலுகுறைந்துள்ளதாகவும், தமிழகத்தில் காற்றின் ஈரப்பதம் குறைந்திருப்பதால் மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் எனவும், தெரிவித்தார்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 4.4. மில்லி மீட்டர் அளவு மழையும், குன்னூரில் 1.4 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மதுரையில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.