
”எதிலேயும் ஒரு லாஜிக் வேணாம சிவா! பக்கத்து ஆட்டோ கண்ணாடி திரும்பியிருக்கிறதாலே என்னோட ஆட்டோ ஸ்டார்ட் ஆகலேன்னு சொல்றதை எப்படிடா நம்புறது?...” என்கிற லாஜிக் கொஸ்டீனெல்லாம் ஆகமத்திலும், ஆன்மீகத்திலும் அடங்கவே அடங்காது.
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலைக்கும், தலைவர்களின் துயரங்களுக்கும் காஞ்சிபுரம் காமாட்சி கோயிலின் வடக்கு வாசல் திறந்திருப்பதே காரணம்...எனும் பரபரப்பு லேட்டஸ்டாய் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
அதாவது காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரரும், காஞ்சி காமகோடி பீடத்தில் அவருக்கு பின்னே வந்தவர்களும் ஆகம நெறி வழுவால் வந்ததோடு கோயிலின் வடக்கு வாசலை மூடியே வைத்திருந்தார்களாம். காரணம் இந்த வாசல் அத்தனை சக்தி நிறைந்ததாம். அதை முறையாக பயன்படுத்தினால் நலம் நல்குமாம், எதிர்மாறாக பயன்படுத்தினால் தீவினை பொங்குமாம். அதனால்தான் அந்த காலத்தில் காமகோடி பீடத்து மகா பெரியவாள் எல்லாம் அதை மூடியே வைத்திருந்தனர்.
ஆனால் சமீபத்தில் கும்பாபிஷேக பணிகளை காரணம் காட்டி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த வடக்குவாசல் கதவு திறக்கப்பட்டே இருக்கிறதாம். இந்த வாசலை திறந்த மாதங்களிலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நல குறைவு உண்டாகி இறந்தார் என்றும், மற்றொரு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உடல்நல குறைவு உண்டானது என்றும் மேற்கோள்காட்டி சாஸ்திரமறிந்த பலர் சொல்லிக் காட்டியும் வடக்குவாசல் கதவு இன்று வரை மூடப்படவில்லை.
இது போக காஞ்சி கோயிலில் பூஜை செய்து வந்த பாபு, ரமேஷ் சாஸ்திரிகள் திடீரென மரணமடைந்திருக்கிறார்கள். இது போக கடந்த சில மாதங்களில் மட்டும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பத்து மனுஷாள் இறந்துவிட்டார்களாம். ஆனால் அதன் பிறகும் வடக்குவாசல் மூடப்படவில்லையாம். இன்னும் எத்தனை பேரை இந்த வடக்கு வாசல் காவு வாங்கப்போகிறதோ என்று பரபரத்துக் கிடக்கிறது காஞ்சி.
ஆனால் அதேவேளையில் வேறு சில சாஸ்திரிகளும், அறநிலையத்துறையும் “வடக்குவாசல் திறந்திருப்பதில் எந்த ஆகம விதிமீறலுமில்லை. பக்தர்களின் வசதிக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. கோயிலை நிர்மாணிக்கும் போது ஆகம ஐதீகங்களை பார்த்துத்தானே வடக்கு வாசலையும் அமைத்திருக்கிறார்கள்...அதை திறந்து வைப்பதுதானே நியாயம்! பின்னே எப்படி அதை மூடி வைக்க வேண்டியது ஐதீகம் என்று சொல்லிட முடியும்? இதெல்லாம் வீண் கட்டுக்கதை.
மரணங்கள் நிகழ்ந்தது சுகவீனம் உள்ளிட்ட இயற்கை காரணங்களே.” என்கிறார்களாம்.
ஆனால் இந்த விஷயம் புயலாய் கிளம்பிய பிறகு ‘வடக்கு வாசலை’ பார்க்கும்போது இனம்புரியாத உணர்வு காஞ்சிபுரத்தார்களுக்கு உருவாவதில் ஆச்சரியமில்லை!