குறைந்த அளவே காப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதால் குறைதீர் கூட்ட்த்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு…

First Published Sep 1, 2017, 8:26 AM IST
Highlights
The lowest amount of insurance is allocated to the farmers walk out of the meeting


நாகப்பட்டினம்

குறைந்த அளவே பயிர்க் காப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர் கூறியது:

“2016 - 2017-ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.105.27 கோடி காப்பீடு நிறுவனத்தில் இருந்து கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு வந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 399 விவசாயிகளுக்கு ரூ.98.58 கோடி பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இன்றுக்குள் (அதாவது நேற்றுக்குள்) அவர்களது சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்” என்று கூறினார்.

அப்போது அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்பது கண்துடைப்பு என்றும், பாதிப்பை விட குறைவான பயிர்க் காப்பீட்டு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கூறி குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகளுக்கு குறைந்த அளவு காப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அங்கு வந்த உதவி ஆட்சியர் கண்ணன், தாசில்தார் ராகவன், நாகூர் காவல் ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

click me!