
சிவகாசி,
சிவகாசி அருகே ரூ.30 இலட்சம் செலவில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம் பயன்பாடற்று கிடப்பதால் இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
கடந்த 2006–ம் ஆண்டு, சிவகாசி தாலுகாவில் உள்ள ரிசர்வ்லைன் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சுமார் ரூ.30 இலட்சம் செலவில் சிறிய விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழாவில் அப்போதையை அமைச்சர்கள் சாத்தூர் இராமச்சந்திரன், மைதீன்கான், ஆட்சியர் ஜவகர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிறிய விளையாட்டு அரங்கம் நகரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பகுதிக்குச் சென்றுவர போதிய போக்குவரத்து வசதியும் இல்லை.
இதனால் கடந்த 10 வருடங்களாக இந்த விளையாட்டு அரங்கத்தை யாரும் சரியான முறையில் பயன்படுத்த வில்லை. ஊருக்குள் இருக்கும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் விளையாட்டு அரங்க வசதி இருப்பதால், மெனக்கட்டு யாரும் இந்த அரங்கத்திற்கு வருவது இல்லை.
ஒரு சில இளைஞர்கள் மட்டும் அந்த விளையாட்டு அரங்கில் வந்து பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் இந்த விளையாட்டு அரங்கத்தின் பகுதியில் இரவு நேரங்களில் குடிப்பது, போதைப் பழக்கங்கள் மேற்கொள்வது போன்ற செயல்கள் நடக்க தொடங்கியது.
மாரனேரி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட இந்த பகுதியில் காவல்துறையினர் சுற்றுப் பணியையும் சரிவர செய்வதில்லை. இதனால் பல குற்ற சம்பவங்கள் இந்த பகுதியில் நடந்து வந்தது.
பல இடங்களில் போதிய விளையாட்டு மைதானம், அரங்கம் இல்லாமல் சாதிக்க வேண்டிய மாணவர்கள் தவித்து வரும் நிலையில் இங்குள்ள விளையாட்டு அரங்கம் வீணாகி வருவது வேதனை அளிக்கிறது என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
இதனை உடனே சம்மந்தப்பட்டவர்கள் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு அரங்கத்தை சுற்றி ஏராளமான அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், குடியிருப்புகள் உள்ளன.
சமூக விரோதிகளினால் இந்த பகுதியினருக்கு சிரமம் ஏற்படுவதற்கு முன்பு விளையாட்டு அரங்கத்தை பராமரித்து, அரசு பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் போட்டிகள் நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்